ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் உறவு மேலும் வலுப்படுத்தப்படும். உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாங்கள் இணைந்து செயல்படுவோம் என இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளுடனும் ஜனநாயகம் உட்பட பல விடயங்களில் பொருத்தங்கள் உள்ளன எனவும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான மாநாடு கடந்த மார்ச்சில் நடைபெற இருந்தபோதும் தொற்று நோய் நெருக்கடி காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இணைய தொடா்பாடல் மூலம் இந்த மாநாடு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
இங்கு பேசிய மோடி, இரு தரப்பு உறவை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போலவே நாங்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம். நீண்ட கால திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸ் பரவலின்போது பல உலக நாடுகளுக்கு இந்தியா மருந்துகள் அனுப்பி உதவியுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் உலக நாடுகளுக்கும் அது கிடைப்பதை நாம் உறுதி செய்வோம் எனவும் மோடி தெரிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரத்தை நாம் இணைந்து மீட்டெடுப்போம். தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு போன்ற நீண்ட கால பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இணைந்து செயல்படுவோம் எனவும் அவா் தெரிவித்தார்.